Sunday, February 24, 2008

"அ.அ. திருப்புகழ்" 25 -- செகமாயையுற்று"

"அ.அ. திருப்புகழ்" 25 -- "செகமாயையுற்று"



இந்த வாரம் சுவாமிமலைத் திருப்புகழில் இருந்து ஒரு பாடல் போடலாம் என் எண்ணி புரட்டினேன். இந்தப் பாடல் கண்ணில் பட்டது. இதன் பொருள் என்னை ஒரு தனிப்பட்ட முறையில் கவர்ந்தது. நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத என் தோழி ஒருவருக்கு சென்ற ஆண்டு பாம்பன் சுவாமிகள் அருளிய "வேற்குழவி வேட்கை" எனும் பதிகத்தை தினந்தோறும் ஓதுமாறு ஆலோசனை சொல்லியிருந்தேன். இவர் ஒரு சில உடற்கோளாறுகளால் கருத்தரிக்க இயலாத நிலையில் இருந்தார். செயற்கை விந்துப் பரிமாற்றம் கூட இருமுறை பயனளிக்காமல் போயிற்று. நம்பிக்கையுடன் இதைப் படித்து வந்த இவர் இப்போது எட்டுமாத கர்ப்பிணி. அடுத்த மாதம் சீமந்தம். முருகப்பெருமானே தனக்குக் குழந்தையாக வர வேண்டும் என்ற பொருளில் அமைந்த இப்பாடலை என் தோழிக்குக் காணிக்கையாக்கி நல்ல முறையில் பிரசவம் நடந்தேற வேண்டி இங்கு அளிக்கிறேன். முருகனருள் முன்னிற்கும்!


********** பாடல் ***********

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்


தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி


மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி


மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்

முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா

முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா


தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே


தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே!
************************************************************


********* பொருள் *********
[பின் பார்த்து முன்!!]

"முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா"
["முகமாயம் இட்ட குறமாதினுக்கு
முலைமேல் அணைக்க வருநீதா"]

அழகினுக்கு ஒரு முகமென்றால் அது
கிழவனுக்கும் பழிப்பு காட்டிய முகமொன்றே!
வேடனாய் வந்தவனைப் பார்த்து ஒதுக்கியவள்
விருத்தனாய் வந்தவன் ஆனையை அழைத்திடினும்
வேலனை மனத்தினின்று விடாது நின்றவள்
தினைப்புனத்தைக் காக்கையிலும் திறனாக நின்றவள்
முகவழகு விஞ்சிய வள்ளிக் குறமாதிவள்!
கொண்டவொரு தவத்தினை விடாது கொண்டவள்
வடிவழகில் மயங்கிய வேலனும் மனமகிழ்ந்தான்
குறமாதின் தனங்களிலே தஞ்சம் அடைந்தான்!
யானெனும் செருக்கு அற்ற அடியவர்க்கு
அருளென்னும் நீதி வழங்கு நீதிபதியே!

"முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா"
[முதுமா மறைக்குள் ஒரு மாபொருட்கு
உள்மொழியே உரைத்த குருநாதா]


முன்னைப் பழைமக்கும் பழைமையான
எல்லாச் சிறப்பும் பொருந்தியதான
வேதமுரைக்கும் பல்வேறு பொருட்களுக்கும்
முந்தையப் பொருளான பிரணவத்தின்
உட்பொருளைத் தந்தைக்கே குருவாகி
எம்பிரான் வாய்புதைத்து கைகட்டி நிற்க
அரும்பொருள் அருளிய குருநாதா!


"தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே"
[தகையாது எனக்கு உன் அடி காண வைத்த
தனி ஏரகத்தின் முருகோனே]


கோபுரத்தின் மீதிருந்து குதித்திட்ட அருணையாரை
தன்கைமீது தாங்கிவந்து உயிர்காத்து அருள்செய்து
'சொல்லற சும்மாயிரு'என உபதேசம் செய்தது அருணையிலே!
அருட்காட்சி தந்ததுவோ மயிலாடும் விராலிமலையில்!
தடையேதுமில்லாமல் நினது அருட்பாதம் தந்து
அன்புடனே உய்வித்ததுவோ ஏரகத்தில்!
தந்தைக்கு உபதேசித்த திருத்தலமாம் சுவாமிமலையில்
தனியாக அமர்ந்திருந்து அருள்சுரக்கும் முருகோனே!

"தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே"
[தரு காவிரிக்கு வடபாரிசத்தில்
சமர் வேல் எடுத்த பெருமாளே]

என்றும் வற்றாது நீர் வழங்கும்
செல்லுமிடமெல்லாம் மரங்களை வளர்த்துவரும்
விரிவான கரையெடுத்து விரைவாக வருவதினால்
கா விரி 'காவிரி' எனும் தனித்தமிழ் பெயர்பெற்ற
ஆற்றின் வடகரையில் விளங்கியிருக்கும்
சுவாமிமலை எனும் திருத்தலத்தில் இருந்து
சூரனுடன் போர் முடிக்க திருவுளம் கொண்டு
சக்திவேல் ஆயுதம் எடுத்த பெருமைக்குரியவனே!


"செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்"
[செகமாயை உற்று என் அகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்பம் உடலூறி]


உலகமாயையெனும் ஆளுகையில் அகப்பட்டு
காமவசப்பட்டு என் இல்லற வாழ்வில்
ஆசை மனைவிக்கு நான் அளித்த
கர்ப்பத்தினால் கருவொன்று அவள் உடலில் நிலைத்து


"தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி"
[தெச மாதம் முற்றி வடிவாய் நிலத்தில்
திரமாய் அளித்த பொருளாகி]


பத்துத் திங்கள் முடியும் போது
முத்துப் பிள்ளையாய் அழகுடனே
நித்திலமாம் இப்பூவுலகில் நன்கு
ஒரு உருவாய் நீ வந்து
அழகுடன் நீ தோன்றி


"மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி"
[மக அவாவின் உச்சி விழி ஆநநத்தில்
மலைநேர் புயத்தில் உறவாடி]


என் மகவு என்கின்ற ஆவல்
என்னுள் உந்திவர ஆசையுடன்
உனை உச்சி மோந்து
அன்புடன் கண்களில் ஒற்றியும்
ஆசை மிகவேறி அப்படியே அள்ளிக்கொண்டு
முகத்தோடு முகம் சேர்த்து மகிழ்ந்தும்
என் திரண்ட புயங்களில் நீ உறவுகொண்டும்


"மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்"
[மடி மீது அடுத்து விளையாடி நித்தம்
மணிவாயின் முத்தி தரவேணும்]


என் மடி மேல் அமர்நது
என்னுடன் மிகவுமே விளையாடி
நாள்தோறும் நின்றன் மணிவாயினால்
எனக்கொரு முத்தம் கொடுத்து அருள்வாய் முருகா!
**************************************************


"சிவகுருவே! திருவேரகத் தேவே! நீ என் மகனாய் வந்து எனக்கொரு முத்தம் தர வேண்டும்!"
****************************************************************************************************

அருஞ்சொற்பொருள்::

தெச மாதம் = பத்து மாதம்
திரமாய் = திரம் ஆய் = நன்றாக
ஆநநம் = முகத்தோடு முகம்
முக மாயம் இட்ட = முக அழகு மிகவும் படைத்த
நீதா = நீதிபதி
முது மா மறை = பழைமையான வேதம்
ஒரு பொருட்கு உள் மொழி = எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமான பிரணவம்
தகையாது = தடை எதுவும் இல்லாமல்
ஏரகம் = சுவாமிமலை
பாரிசம் = புறம், பக்கம்
சமர் = போர்
***************************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
*****************************

Monday, February 11, 2008

"அ.அ. திருப்புகழ்"[24] -- "அமைவுற்றடைய"

"அ.அ. திருப்புகழ்" [24] -- "அமைவுற்றடைய"


மயிலை மன்னார் ஐயனின் "நிலையாமை" பற்றி சொன்னதும், அதே நினைவுடன் திருப்புகழைப் புரட்டியபோது முதலில் வந்தது திருத்தணி மேவும் தணிகக்குமரனைப் போற்றும் இந்தப் பாடல்!

விரிவாகப் படித்ததும், இதுவும் அதே கருத்தைச் சொல்லியிருப்பதைப் பார்த்ததும், உடனே பதிகிறேன்.

முருகனருள் முன்னிற்கும்!
**************************************


.........."பாடல்".........

"அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் கிசையாதே

அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் கொடுபோகுஞ்

சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் புகல்வோனே

இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் புகநாடும்

சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் பெருமாளே.
**************************************************


........"பொருள்" [பின் பார்த்து முன்!!].........

"இமயத்து மயிற்கு ஒருபக்கம்
அளித்தவருக்கு இசையப் புகல்வோனே"

பிருகுவென்னும் மாமுனிவர்
சிவனொன்றே திருவென நம்பி
திருவுருவாம் உமையவளை
இறையென்று மதியாமல்
சிவனாரை மட்டுமே
வலம்வந்தார் கயிலையில்!


இடம் நீங்கி உமையவளும்
காஞ்சியெனும் திருநகரில்
நால்வேதப் பொருளான
மாவடியில் தவமிருந்து
மணல்வடிவில் உருவமைத்து
சிவனாரை எண்ணியே
தவமிருக்க மறையோனும்
உமையவளை மணமுடித்து
இடப்பாகம் தந்திட்டான்!

பிரணவத்தின் பொருளறியா
நான்முகனின் தலைகுட்டிச்
சிறையிட்ட முருகோனை
வேண்டிட்ட சிவனார்க்கு
குருவாகி இசைவாகப்
பொருள் சொன்னவரே!


"இரணத்தினில் எற்றுவரைக் கழுகுக்கு
இரையிட்டிடு விக்ரமவேலா"

போர்புரிய வந்திருந்து
எதிர்நின்று தாக்கவரும்
மதியற்ற வீரர்களைக்
கொன்றங்கு கழுகுக்கு
இரையாக அளிக்கின்ற
வீரமுடைய வேலென்னும்
ஆயுதத்தைத் தாங்கிநிற்கும்
வேலாயுதரே!

"சமயச் சிலுகிட்டவரைத் தவறித்
தவமுற்ற அருள் புகநாடும்"

எங்கிருந்து பிறந்தாலும்
எவ்வழியில் சென்றாலும்
நதியெல்லாம் வழியோடி
இறுதியிலே அடையுமிடம்
கடல்மடியே என்பது போல்
எவர்மூலம் தோன்றிடினும்
எவருரையால் வளர்ந்திடினும்
சமயங்கள் ஒவ்வொன்றும்
சென்றடையும் முடிவிடமோ
இறைவனது திருவடிகள்!

இதையுணரா வீணர்சிலர்
சமயத்தை முன்னிறுத்தி
வாதங்கள் செய்வதுவும்
வீண்சண்டை புரிவதுவும்!

பயனில்லாச் செயலென்று
அவ்வழியை விலக்கிவிட்டு,
நினைநாடி யான்செய்யும்
தவமொன்று நிறைவாகி
நின் திருவருளில் இனிதாக
யான் புகவும் விரும்புகின்ற,


"சடு பத்ம முக! குக! புக்க கனத்
தணியில் குமரப் பெருமாளே!"


தாமரைபோல் மலர்ந்திருக்கும்
ஆறுமுகம் திருவுருவாய்க்
கொண்டிருக்கும் ஷண்முகரே!

உள்ளமெனும் குகையினிலே
அருளொளியைப் பரப்புபவரே!


குறவள்ளி தனைமணந்து
வருவோரின் வினை தணிக்கும்
தணியென்னும் மலைசேர்ந்து
பெருமையுடன் வீற்றிருக்கும்
தணிகைக் குமார மூர்த்தியே!

பெருமையுடையவரே!


"அமைவுற்று அடையப் பசியுற்றவருக்கு
அமுதைப் பகிர்தற்கு இசையாதே"

["அடையப் பசியுற்றவருக்கு அமைவுற்று
அமுதைப் பகிர்தற்கு கிசையாதே" ]


பசியால் மிகவாடி வாசல் நின்று
உண்ணுதற்கு ஏதேனும் தருகவென
இரந்து நிற்போரைக் கண்டு மனமிரங்கி
இருப்பதை அவருடன் மனவமைதியுடன்
பகிர்ந்துண்டு வாழும் மனமின்றி,

"அடையப் பொருள் கைக்கு இளமைக்கென வைத்து
அருள்தப்பி மதத்து அயராதே"
["அடையப் பொருள் இளமைக்கென கைவைத்து
அருள்தப்பி மதத்து அயராதே"]

இருக்கின்ற பொருள்யாவும்
இருக்கின்ற இளமையினைத்
தக்கவைத்துக் கொள்ளும்
தகமைக்கே வாய்த்ததென
தனக்குள்ளே நினைத்திருந்து
எவருக்கும் கொடுக்காமல்
நல்லோர் சொன்ன நன்னெறியை
நினைவினிலும் கொள்ளாமல்
அதைவிட்டு அகன்றிருந்து
அகங்காரமென்னும் பெருநோயால்
தளர்ச்சி அடையாமலும்,

"தமர் சுற்றி அழப் பறைகொட்டி இடச்
சமன் நெட்டு உயிரைக் கொடுபோகும்"


உடனிருக்கும் சுற்றத்தாரும்
ஓவெனவே அலறியழவும்
பறைமேள வாத்தியங்கள்
'டமடம'வென முழங்கிடவும்
அரசனிவன் ஆண்டியிவன்
படித்தவன் மூடனிவன்
பணக்காரன் ஏழையிவன்
சற்றுமுன்னரே மணமுடித்த
மாப்பிள்ளையிவன் என்கின்ற
பேதங்கள் ஏதுமின்றி
சமனாக அனைவரையும்
கொண்டு செல்கின்ற தன்மையினால்
"சமன்" என்ற பெயர் படைத்த
கொடுங்கூற்று இயமனும்
இவ்வுயிரைப் பற்றி
நெடுந்தொலைவு கொண்டுபோகின்ற,


"சரிரத்தினை நிற்கும் எனக் கருதித்
தளர்வுற்று ஒழியக் கடவேனோ"

இளமையானவொரு கணவன்
அழகான அவன் மனைவி
அடை செய்து கொண்டுவாவென
அன்பான கணவன் கேட்க
அரிசியினை ஊறவைத்து
அன்புமனைவியும் அடைசெய்து
வட்டிலிலிட்டு பரிமாறிட
ஆவலுடன் அதையுண்டவன்
இடப்பக்கம் வலிப்பதாகச்
சொல்லிச் சற்றுப் படுத்தான்!
படுத்தவன் மீண்டும் எழவேயில்லை!
இதுவே இவ்வுலக வாழ்வு!

"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேயிறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே" [திருமந்திரம்] [148]
[திருத்தத்துக்கு நன்றி, திரு. திவா!]

இதுவொன்றே உண்மையென
ஒருபோதும் அறியாது
நிலையற்ற இவ்வுடலை
என்றுமே நிலைத்திருக்கும்
எனக்கருதி இதை வளர்த்து
இதற்கெனவே பாடுபட்டுத்
தளர்ந்திங்கு யான் அழிவது
இது முறையாமோ?

[முறையில்லை! நிலையாமையை உணர்ந்து நிலை பெற அருள் முருகா!]
*******************************************************************************

"அருஞ்சொற்பொருள்"


தமர் = தம் மக்கள், சுற்றத்தார்
சமன் = அனைவரையும் சமமாகக் கொண்டு செல்லும் இயமன்
இரணம் = போர்
எற்றுவர் = தாக்கி எதிர்ப்பவர்
சிலுகை = சண்டை
சடு = 'ஷட்' என்னும் வடமொழியைத் தமிழாக்கி ஆறு[6] எனும் பொருள்
************************************************************************


அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!!
முருகனருள் முன்னிற்கும்!!!
******************************************