Tuesday, July 13, 2010

அ. அ. திருப்புகழ். -- 39 -- 'துப்பாரப்பா'

அருணையார் அருளிய திருப்புகழ். -- 39

சந்தத்தின் சிறப்பே திருப்புகழின் சிறப்பு! சந்தத்திற்குள்ளும் ஒரு பொருளை
வைத்துப் பாடுவதே திருப்புகழின் பெருஞ்சிறப்பு! அதனை விளக்கும் ஒரு புகழே இந்தத் திருப்புகழ்!
ஐம்புலன்களை அடக்கி, உடலை ஒடுக்கி, அறிவுக்கும் எட்டாத அவனை அடைவது எப்படி என
இந்தத் திருப்புகழ் மெய்யுற விளக்குகிறது! வாருங்கள்! பகிர்வோம்!

முருகனருள் முன்னிற்கும்!

********** பாடல் ************

தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான


துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
*********************

************ பொருள் ************

[வழக்கம்போல் முன் பார்த்துப் பின் பார்க்கலாம்!]


தப்பா மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே

தப்பாமல் பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக் களைவோனே

நாளென்செயும் வினைதான் என்செயும்
எனச் சொல்வார் நாமாரும் குமரனைப் பாடினால்

நாடோறும் தவறாமல் நல்லோனைப் பாடிவந்தால்
தீராத வினையெல்லாம் தீர்த்துவைக்கும் முருகோனே

தற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா

தற்கு ஆழிச் சூர் செற்றாய்
மெய்ப் போதத்தாய் தணிகைத் தனிவேலா

எனை மிஞ்சி எவருமிலை எனும்
அகந்தையினைத் தான் கொண்டு

ஆயிரத்தெட்டு அண்டங்களையும்
ஆளுகின்ற ஆக்ஞா சக்கரத்தால்

அனைத்துலகும் ஆண்டுவந்த சூரபதுமனை
தனிவேல்விடுத்து வெற்றிகொண்டவனே

சிவஞான வடிவேயான மெய்ப்பொருளோனே
தணிகைமலை வீற்றருளும் தண்டபாணித் தெய்வமே!

அப்பா கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே

அப்பாகைப் பாலைப்போல் சொல்
காவல் பாவை தனத்து அணைவோனே

பரண்மீது நின்று பறவைகளை விரட்டுதற்காய்
'சோ...சோ...'வெனத் தீங்குரல் எழுப்புகையிலும்

'ஆரடா நீ'யென்று வேடனாய் வந்தவனை
விரட்டுமொழி பேசுகையிலும்

'தேனுண்டு தினையுண்டு தின்றுபசி தீர்ந்திடவே
வா'வென்று வந்தவொரு கிழவனையே உபசரிக்கையிலும்

'ஆனைமுகா சரண'மென அண்ணனையே அழைத்தங்கு
காமுற்ற கிழவனையே வெருட்டிநின்ற போதினிலுமே

தீம்பாகாய்க் குரலெழுப்பி சிந்தைமனம் கவர்ந்தவளாம்
நம்பியவன் திருமகளாம் வனக்குறத்தி வள்ளியவள்

தினைப்புனத்தைக் காவல்செய்த தீதில்லா தெய்வமகள்
த்னமணைத்து தினம் மகிழும் தனிப்பெருந் தெய்வமே!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!

துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்

துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்

து பார் அப்பு ஆடல் தீ மொய்க் கால்
சொல் பா வெளி முக்குண மோகம்
துற்றாய பீறல் தோல் இட்டே
சுற்றா மதனப் பிணிதோயும்

பயிர் விளைந்து உணவுநல்கும் நிலமும்
உயிர் நிறைக்க உவந்தளிக்கும் நீரும்

கீழிருந்து மேலெழும்பி அசைகின்ற தீயும்
மெய்தழுவி நமையணைத்து வீசுகின்ற காற்றும்

சொல்லுக்கும் அடங்காது பரந்திருக்கும் வான்வெளியும்
சத்துவம் ராஜஸம் தாமசம் என்கின்ற முக்குணமும்

மண் பெண் பொன் என்னும் மூவகையாம் ஆசைகளும்
நெருக்கமாய் உள்ளுள்ளே ஒடுக்கமாய் வைத்திருந்து

ஒன்பது ஓட்டைகள் அடங்கிய தோலால்
நன்றாகச் சுற்றி மூடிய இவ்வுடம்பில்

கூடவே பிணைத்திருக்கும் காமமெனும் நோயும்
தோய்ந்திருக்கும் எப்போதும் எமையே வாட்டிநிற்கும்


இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே

இப் பாவக் காயத்து ஆசைப்பாடு
ஏற்றே உலகில் பிறவாதே

நிலம்புகுந்து பயிரழிக்கும் திருட்டு மாட்டுக்குக்
கட்டையொன்றைக் கட்டியங்கே அனுப்புதல்போல்

வினைநிறைந்த காரணத்தால் விளைகின்ற இவ்வுடம்பும்
ஆசைகளைக் கூட்டிவந்து அல்லலுற வந்ததிங்கே

பாவம்நிறைப் பொய்யுடம்பைப் பெற்றிங்கே வாழாமல்
மீண்டுமொரு பிறப்பிங்கே இனிமேலும் நிகழாமல்


எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

ஏத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்

நின்புகழை நாடோறும் நித்தமிங்கே பாடாதார்
ஆரவாரக் கல்விஞானம் பெற்றதனால் கிட்டாத

அன்பிலார்க்கு என்றுமிங்கே எட்டாது நின்றிருக்கும்
அன்புருவாய் நிறைந்திருக்கும் நின்னருளைத் தரவேண்டும்!

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.

அனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே
என்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே

மும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே
சர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே

எனையாளும் அப்பனே குமரப் பெருமானே!
**********************

********* அருஞ்சொற்பொருள் **********

து = உணவுப் பொருள்,
பார் = அதை நல்கும் பூமி
அப்பு = நீர்
ஆடல் தீ = அசைகின்ற நெருப்பு
சொல் பா வெளி = சொற்களால் புகழப்படுகின்ற ஆகாய வெளி
துற்றாய = நெருக்கமாய் வைக்கப்பட்டுள்ள
பீறல் = கிழியல்
பாவக் காயம் = பாவ மூட்டையான உடம்பு
எத்தார் = ஏத்தார் = போற்றிப் பாடாதார்
வித்தாரத்தே = ஆரவாரமான கல்வி ஞானம்; அகம்பாவக் கல்வி ஞானம்
தற்கு = தருக்கு; செருக்கு; ஆணவம்
ஆழி = ஆக்ஞா சக்கரம்
செற்றாய் = அழித்தவரே
பாகைப் பால் = பாகு + பால்; இனிமை
அத்தா = குரு; மூத்தோன்
நித்தா = என்றும் நிலைத்திருப்பவன்
முத்தா = ஆசா பாசங்களில் இருந்து நீங்கியவன்
சித்தா = சித்துக்களை உடையவன்
*************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

"அ. அ. திருப்புகழ்" - 'வாசித்துக்....' -- 38

"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 'வாசித்துக்....' -- 38

எல்லாம் வல்ல வயலூர்க் குமரனை, அருகிலிருக்கும் திருசிராப்பள்ளியில் உறை தாயுமான சுவாமிக்கும் தலைப் பொருளாக வைத்து இந்த அழகிய திருப்புகழ் பின்னப்பட்டிருக்கிறது. பல உயர்ந்த விஷயங்கள் இந்தப் புகழிலே தெரிவிக்கிறார் அருணையார்! பலமுறை படித்துணர்ந்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய திருப்புகழ் இது! தேடித் தேடொணாப் பெரும்பொருள் எவருக்காகத் தானே இறங்கி வந்து ஆட்கொள்வான் என்பது இதனுள் இருக்கும் மறைபொருள்! ஓதுதற்கும் இனிமையான சந்த அமைப்பில் நம் மனம் கவரும் வகையில் இதனைப் படைத்திருக்கிறார் அருணகிரிநாதப் பெருமான்!

முருகனருள் முன்னிற்கும்!

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன ...... தந்ததான

......... பாடல் .........

வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது

வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது

மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத

ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது

லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன்

யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி

யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ

ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய

லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே

ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட

ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா

நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்

நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா

நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை

நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே.

தானத்தத் தான தானன தானத்தத் தான தானன

தானத்தத் தான தானன ...... தந்ததான

......... பொருள் .........

[வழக்கம்போலவே, பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]

"ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய
லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே"

[ஆசைப்பட்டு ஏனல் காவல்செய் வேடிச்சிக்காக மா மயல்
ஆகிப் பொற்பாதமே பணி ...... கந்தவேளே ]


உளமார மனமாரத் தனைநினைந்து நெக்குருகி
உடல்வாட உளம்வாட மலைக்காட்டுத் தினைப்புனத்தில்

கவணாடக் கல்லெறிந்து புள்ளினங்கள் பறந்தோடக்
வண்டாடும் முகம்வாட வெய்யிலிலே தினம் வாடும்

வனநாட்டு வேட்டுவச்சி மலைக்குறத்தி வள்ளிக்கென
உடனாடும் துணைவிட்டுத் தனியாகக் கால்நடையாய்க்

கானகத்தே காதலியைத் தேடிவந்து அருள்செய்து
தனைநாடிக் கால்நொந்த தமிழ்மகளின் பொற்பாதம்

தனைக்காணப் பலவேடம் புனைந்திருந்து தொழுதாடி
வேடனாக வந்திருந்து வேங்கைமரம் தானாகி

விருத்தனாகிப் பசிதீரத் தினைமாவும் தேனுமுண்டு
நாவறண்டு மயிலாடும் கானகத்தே புனலாடத்

துணைநாடித் தமையனையும் கரியாக வரவேண்டி
வளையாடும் கைகளுக்கு வளையடுக்கும் செட்டியாகி

வஞ்சியவள் கைப்பிடித்து தம்வேடம் தனைக்காட்டிப்
கொஞ்சுமுகக் குறவள்ளியைக் கவர்ந்தங்கு செல்கையிலே

போரிட்டப் பெற்றவனைப் பொருதிநின்று முடிசாய்த்து
மீண்டுமவர் உயிர்ப்பிக்கக் குறவள்ளிக் கருள்செய்து

பொன்மயிலாள் பொற்பாதம் மையலுடன் தான்பணிந்து
தனைவேண்டிய அடியவளை ஆட்கொண்டக் கந்தவேளே!


"ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட
ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா"

[ஆலித்துச் சேல்கள் பாய் வயலூரத்தில் காளம் ஓடு அடர்
ஆரத்தைப் பூண் மயூர துரங்க வீரா]

மேடுயர்ந்த வயலினிலே மிகவாக வளங்கொழிக்க
ஓடுகின்ற நீரினிலே ஆரவாரம் மிகவெழுப்பி

ஆடுகின்ற மீன்கள்நிறை வயல்சூழும் வயலூரில்
சீறுகின்ற கொடுவிடத்தைக் கொண்டிருக்கும் நச்சரவம்

மாலையாகத் தானணியும் மயில்மீது தீரமுடன்
பரிதிமீது அமர்ந்திருக்கும் வீரனெனக் காட்சிதரும்

பெருமையுள்ள வயலூர்க் குமர வேளே!


"நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள்
நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா"

[நாசிக்குள் ப்ராணவாயுவை ரேசித்து எட்டாத யோகிகள்
நாடிற்றுக் காண ஒணாது என நின்ற நாதா]


வலக்கால் பெருவிரலில் மூண்டெழும் இடைக்கலை

இடக்கால் பெருவிரலிம் தானெழும்பும் பிங்கலையும்

மேனோக்கிப் புறப்பட்டுக் கொப்பூழில் தாம் பிணைந்து

இடப்பக்கம் இடைகலையும் வலப்பக்கம் பிங்கலையுமாய்

முதுகு,பிடர்,தலைவழியே மூக்கினிலே முடிந்திருக்கும்


வலநாசித் துவாரத்தால் பிங்கலையும் வெளியேறும்

இடநாசித் துவாரத்தால் இடைகலையும் தான்செல்லும்

உள்ளிழுக்கும் சுவாசமோ பூரகம் எனப்படுமே

வெளியேறும் சுவாசமும் ரேசகம் எனப்படுமே

உள்நிறுத்தும் காற்றினையே கும்பகம் எனச்சொல்வர்


உட்கொள்ளும் சுவாசத்தை உச்சிக்குக் கொண்டுசென்று

ஸகஸ்ராரம் சேர்கையிலே அமுதமது உருவாகும்

இதுபுரியும் ஊட்டத்தால் உள்ளுணர்வு உனில்பிறக்கும்

ஆறுவகை ஆதாரமும் ஒருவருக்கு வசப்படுமே


முறையான குருமூலம் சரியாகக் கற்றவரே

இதன்சூக்குமம் அறிந்திடுவார் முறையான பலன்பெறுவார்!

ஆதார வாயுவினை இவ்வண்ணம் பயிலாத

யோகியரும் ஞானியரும் எத்துணைதான் விரும்பினாலும்

காணுதற்கு அரிதாகி அப்பாலுக் கப்பாலாகிக்

காணவொட்டாப் பரம்பொருளே! தனிப்பெரும் தலைவனே!


"நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை
நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே."

[நாகத்துச் சாகை போய் உயர் மேகத்தைச் சேர் சிராமலை
நாதர்க்குச் சாமியே சுரர் தம்பிரானே.]


ஓங்கி உயர்ந்திருக்கும் பெருமலையின் கிளைச்சிகரம்
நீண்டிருந்து மேலெழும்பி வானிருக்கும் மேகத்தைச்

சேர்ந்தடையும் வண்ணம்போல் சிறந்திருக்கும் சிராப்பள்ளி
மலையினிலே குடியிருந்து அடியவர்க்கு அருளிடவே

பெருவெள்ளம் தாண்டிவந்து தான்பெற்ற மகள்துடிக்கும்
நிலையினையே காணவொண்ணாத் தாயவளின் துயர்கேட்டுத்

தானேதாயாக அக்கரைசென்று மகப்பேறுத் தாதியாகச்
சென்றருளிய தாயுமான சுவாமிக்கு உயரியபொருளே!


"வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது
வாய்விட்டுப் பேசொ ணாதது"

[வாசித்துக் காண ஒணாதது பூசித்துக் கூட ஒணாதது
வாய்விட்டுப் பேச ஒணாதது]

எத்தனைநூல் கற்றாலென்ன எவையெவையோ படித்துமென்ன
அத்தனையும் பயன்தாரா அனுபவமே கைகொடுக்கும்

எத்தனைமலர் கொண்டிங்கே நானுன்னை அர்ச்சித்தும்
அத்தனையும் உன்தாளிணை சேர்ந்திடுமோ அறியேனே

எத்தனையோ பெருமைகளைச் சொல்லியுனைப் பாடினாலும்
அத்தனையும் நின்பெருமை சொல்லுதலும் கூடிடுமோ

"நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது
மாயைக்குச் சூழொ ணாதது"

[நெஞ்சினாலே மாசர்க்குத் தோண ஒணாதது நேசர்க்குப் பேர ஒணாதது
மாயைக்குச் சூழ ஒணாதது]


வெளிப்பார்வை வேடமிட்டு மனத்தினிலே மாசுவைத்து
ஒளித்திங்கு வாழ்வோர்க்கு பாலுள்ளேநெய்போல மறைந்திருக்கும்

தனைநினைந்து தினமுருகித் தணியாதக் காதலுடன்
மனமிருந்து நீங்காது என்றென்றும் வீற்றிருக்கும்

ஓயாது நிதமுழற்றி ஓராயிரம் உருக்காட்டும்
மாயையினால் வளைத்திடவே எந்நாளும் முடியாதது


"விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது
லோகத்துக் காதி யானது"

[விந்துநாத ஓசைக்குத் தூரமானது மாகத்துக்கு ஈறு தான் அது
லோகத்துக்கு ஆதி ஆனது]

தத்துவங்கள் முப்பத்தாறில் முடிவான விந்துநாதம்
அத்தனையும் கடந்தங்கே தொலைவினிலே பொலிந்திருக்கும்

பூதவெளி கடந்திருக்கும் முடிவினிலே ஒளிர்ந்திருக்கும்
விண்வெளிக்கும் அப்பாலாய்த் தானிருந்து திகழ்ந்திருக்கும்

அண்டத்தில் நிலவுகின்ற எண்ணிறைந்த உலகங்கள்
அத்தனைக்கும் முதலாக விளங்குகின்ற மெய்ப்பொருளை


"கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி
யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ"

[கண்டு நாயேன் யோகத்தைச் சேருமாறு மெய்ஞ்ஞானத்தைப் போதி யாய்
இனி ஊனத்தைப் போடு இடாது மயங்கலாமோ]

நாயினேன் யானும் உள்ளுக்குள் கண்டுணர்ந்து
சிவயோகம் என்கின்ற பேருணர்வை அடையுமாறு

மெய்ஞ்ஞானப் பொருளதுவை உபதேசம் அருளிடுவீர்
பொய்யான மேனியிதை வெறுக்காமல் மயங்குவதோ?
[வாணாளை வீணாகக் கழிப்பதுவும் தகைமையோ?
மெய்யான தெய்வமே! இதுவுமுனக்கு முறைமையோ?]
***************

........ அருஞ்சொற்பொருள்..........

மாகம் = விண் முடிவு
ஊனம் = பொய்யான உடம்பு
போடு = வெறுத்து ஒதுக்குதல்
ஏனல் = தினைப்புனம்
மயல் = மையல் என்பதன் திரிபு
ஆலித்து = ஆரவாரம் செய்து
சேல் = மீன்
காளம் = விடம்
அடர் = நிறைந்த
ஆரம் = மாலை
ரேசித்து = வெளிவிடுத்து மீண்டும் பூரகம் செய்து சஹஸ்ராரப் பெருவெளியை எட்டுதல்
நாகம் = ஆகாயம்
சாகை = சிகரம், கிளை
சுரர் = தேவர்
*****************

வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
***************

"அ.அ.திருப்புகழ்" 37 -- "கள்ளக் குவாற் பை"

"அ.அ.திருப்புகழ்" 37 -- "கள்ளக் குவாற் பை"

திருப்புகழின் ஞான விளக்கங்களையெல்லாம் படிக்கிறபோது, மேலெழுந்தவாரியாக நான் எழுதிப் போகும் விளக்கம் எனக்குள் ஒரு அச்சத்தை தோற்றுவிக்கிறது! ஒவ்வொரு புகழுக்குள்ளும் ஓராயிரம் மறை பொருள் ஒளிந்திருக்கையில், நுனிப்புல் மேய்வது சரியோ என! 'உனக்குத் தெரிஞ்சதைத்தானே நீ செய்ய முடியும்!' என உள்ளேயிருந்து ஒரு குரல் வர, ராமர் பாலத்து அணில் போல என் பணியைத் தொடர்கிறேன். முருகனருள் முன்னிற்கும்!

அடுத்து என்ன எழுதலாம் எனப் புரட்டியபோது, முதலில் கணணில் பட்டது இந்த வள்ளிமலைத் திருப்புகழ்! சந்தம் இதுபோல எவரால் எழுத முடியும் என்பதுபோல அமைந்திருக்கிறது! பொருளோ அதற்கும் மேலே ஒரு படி போய், இவ்வுடம்பின் அநித்தியத்தைப் புட்டு வைக்கிறது. இதற்கு இடையில் ஒரு அருமையான உபதேசமும் இதில் ஒளிந்திருக்கிறது! எப்படி பக்தி செய்தால் முருக தரிசனம் கிட்டும் என அருணையார் கோடிட்டுக் காண்பித்திருக்கிறார்! முதலில், பாடலைப் பார்ப்போம்!

தய்யத்த தாத்த தய்யத்த தாத்த

தய்யத்த தாத்த ...... தனதான

......... பாடல் .........

கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ...... பசுபாச


அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சாப்பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே


வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

************************

-------- பொருள் --------
[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!]


தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்

வெள்ளுத்தி மாற்கு ...... மருகோனே

தெள் அத்தி சேர்ப்ப வெள் அத்திமாற்கும்
வெள் உ[ந்]த்திமாற்கும் மருகோனே

"தெள் அத்தி சேர்ப்ப"

செயலாக்கம் செய்வதற்கோர்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
கிரியா சக்தியின் வடிவமான
தெளிந்த நல்லறிவு மிக்க
தெய்வயானையின் தலைவரே!

"வெள் அத்திமாற்கும் மருகோனே"

வெள்ளையானையெனும் ஐராவதத்தைப்
பட்டத்துயானையாய்க் கொண்டிருக்கும்
தேவலோக அரசனான தேவேந்திரனின்
மகளை மணந்ததனால் மருமகனாகியும்,

"வெள் உ[ந்]த்திமாற்கும் மருகோனே"

வெண்ணிறம் பொங்கிப் பெருகும்
பாற்கடலிற் பள்ளிகொண்டதிருமாலின்
தங்கை மகனாய்ப் பிறந்ததனால்
அவருக்கு மருகனுமான முருகனே!


சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்

புள்ளத்த மார்க்கம் ...... வருவோனே

சிள் இட்ட காட்டில் உள்ள கிரார் கொல் புள்
அத்த மார்க்கம் வருவோனே

மனவிருப்பு மிகக்கொண்டு
தினைகாத்த குறமகளை
வண்டினங்கள் சூழ்ந்திருக்கும்
வனத்தினிலே நிறைந்திருக்கும்
புள்ளினத்தைக் கொல்கின்ற
வேடுவர்கள் வாழ்ந்திருக்கும்
நெடுங்காட்டில் நடந்துசென்று
தேடியலைந்து திரிந்திட்ட பெருமானே!

வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்க

வல்லைக்கு ளேற்று ...... மிளையோனே

வள்ளிச் சன்மார்க்கம் விள் ஐக்கு நோக்க
வல்லைக்குள் ஏற்றும் இளையோனே

"வள்ளிச் சன்மார்க்கம்"

மனங்கவர்ந்த மன்னவனை
வனவேடன் வடிவினனை
கிழவேடம் தாங்கிவந்து
தினையள்ளித் தின்றவனைத்
தீரா விக்கலினால் தொண்டைதிணறச்
சுனையள்ளிக் குடித்தவனை
ஆனையண்ணன் உதவிகேட்டு
அரவணைத்துக் கொண்டவனை
வானோர்க்கும் வல்லபிரானை
மனதினிலே எண்ணியெண்ணித்
தன்னை மறந்துத் தலைவன் தாளே
தலைப்பட்டு நின்றிருந்தக் குறமகளைத்
தானே தேடிவந்து ஆட்கொண்ட அருளாளன்
தன்னை இழந்து "அவனை" நினைந்தவரை
முன்னின்று ஆட்கொள்ளும் மார்க்கமே
வள்ளிச் சன்மார்க்கமெனும் மறைநெறியாம்!

"விள் ஐக்கு நோக்க வல்லைக்குள் ஏற்றும் இளையோனே"

குறவள்ளி கடைபிடித்த
சன்மார்க்க நெறிதன்னைச்
சிவனாரும் வேண்டிடவேத்
தந்தைக்கும் அந்நெறியைக்
கண்ணிமைக்கும் நொடிப்பொழுதில்
அவர் செவிக்குள் உபதேசம்
செய்திட்ட இளையவனே!

வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்த

வள்ளிக்கு வாய்த்த ...... பெருமாளே.

வள்ளிக் குழாத்து வள்ளி கல் காத்த
வள்ளிக்கு வாய்த்த பெருமாளே!

வள்ளிக்கொடி படர்ந்திருந்து
பக்கமெலாம் நிறைந்திருக்கும்
வள்ளிமலையெனும் மலைக்காட்டில்
தினைப்புனத்தைக் காக்கவந்து
தின்னவரும் புள்ளினத்தைக்
கவண்கல்லை வீசியெறிந்து
'சோசோ'வென ஆலோலம் பாடிய
வள்ளிக்குறத்திக்குக் கணவனாய்
வாய்த்திட்ட பெருமையுடையோனே!


கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை

"கள்ளக் குவால் பை"

பொய்,சூது, வஞ்சனையெனும்
கள்ளத்தனங்களால் நிறைந்த பை

"தொள்ளைப் புலால் பை"

ஒன்பது ஓட்டைகளை வைத்த
மாமிசத்தால் ஆன பை

துள்ளிக்க னார்க்க ...... யவுகோப

கள்வைத்த தோற்பை

"துள் இக்கனார் கயவு கோபம் கள் வைத்த தோல் பை"

இங்குமங்கும் அலைந்து திரிந்து
துள்ளுகின்ற கரும்புவில்லைக் கொண்ட
மன்மதனால் உண்டாகும் அயர்வு,
கோபமெனும் தீய கள்ளைத் தன்னுள்ளே
வைத்திருக்கும் தோலாலான பை

பொள்ளுற்ற காற்பை

கொள்ளைத்து ராற்பை ......

"பொள் உற்ற கால் பை"

இங்குமங்குமாய் வெகுவேகமாய்
உள்ளுக்குள் அலைகின்ற
பத்து விதக் காற்றடைத்த பை

"கொள்ளை துரால் பை"

வீசுகின்ற காற்றினிலே
செத்தையென அலைகின்ற
சருகான இலைபோலக்
கூற்றுவன் கயிறுவீசிக்
கொள்ளை கொண்டுபோம் பை

பசுபாச

அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பை

வெள்ளிட்ட சா

"பசு பாச அள்ளல் பை"

பசுவென்னும் ஆன்மாவும்
பாசமென்னும் ஆணவமும்
சேர்ந்தடைத்த சேற்றுப் பை

"மால் பை"

ஆசை, காமமென்னும்
மயக்கங்கள் நிறைந்த பை

"ஞெள்ளல் பை"

பாவங்களும் குற்றங்களும்
நிறைந்திருக்கும் பை

"சீ பை"

சீழ் நிறைந்த பை

"வெள் இட்ட அசா"

தளர்ச்சி மிகுந்த பை

பி ...... சிதமீரல்

அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்

கொள்ளப்ப டாக்கை ...... தவிர்வேனோ

"பிசிதம் ஈரல் அள்ள சுவாக்கள் சள் இட்டு இழா
பல் கொள்ளப்படு ஆக்கை தவிர்வேனோ"

உயிரிழந்து போனபின்னே
சடலத்தில் மிகுந்திருக்கும்
இறைச்சி, ஈரல் எனும் உறுப்புகளை
அள்ளியுண்ணவரும் நாய்கள்
'சள்'ளென்று குலைத்தும், இழுத்தும்
பற்களால் கடித்துக் குதறும்
இவ்வுடம்பை ஒழிக்கமாட்டேனோ?
********************

அருஞ்சொற்பொருள்

குவால்= கூட்டம்
தொள்ளை= ஓட்டை
புலால்= மாமிசம்
இக்கன் = கரும்பு வில்லை உடைய மன்மதன்
கள்= மயக்கம் தரும் பானம்; கோபமும் மயக்கத்தைத் தரும்
பொள்= வேகத்தைக் குறிக்கும் சொல்
கால்= காற்று
துரால்= செத்தை, சருகு
மால்= மயக்கம்
ஞெள்ளல்= குற்றம்; சோர்வு; பள்ளம்
அசா= தளர்ச்சி
பிசிதம்= இறைச்சி
சுவா= நாய்
ஆக்கை= உடம்பு
தெள்= தெளிந்த அறிவு
அத்தி= யானை; தெய்வானை
உத்தி= உந்தி= கடல்
சிள்= சிள் வண்டு
கிரார்= கிராதகர்; வேடர்
புள்= பறவை
அத்தம்= காடு
மார்க்கம்= வழி
விள்= விளக்கிச் சொல்
ஐ= தந்தை
வல்லை= விரைவு, வேகம்
நோக்கம்= கண்ணிமைக்கும் நேரம்
************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 36 "ஏது புத்தி ஐயா எனக்கு?"

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 36 "ஏது புத்தி ஐயா எனக்கு?"


திருத்தணி வாழ் முருகப் பெருமானைப் புகழ்ந்து அமைந்திருக்கும் இந்தப் பாடலைப் படித்தவுடன் என் மனதில் தோன்றிய முதல் எண்ணம் இதுதான்!
அருணகிரிநாதர் மகா குறும்புக்காரர்!

மிக மிக எளிய, படித்தாலே எவராலும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பாடலை இயற்றிவிட்டு, சந்தத்தில் அதனைப் போடும் போது, இங்குமங்குமாய்ப் பல இடங்களில் கூட்டிச் சுருக்கி, ஏதோ ஒரு கடினமான பாடல் போலத் தோன்றுமாறு இதனை அருளியிருக்கிறார்!
பொருள் விளக்கம் என ஒன்றுகூட இப்பாடலுக்கு அநேகமாகத் தேவையிருக்காது! பதம் பிரித்தபின், வெகு எளிதாகப் புரியும் பாடல் இது!
முதலில் பாடலையும், பின்னர், அதனைப் பதம் பிரித்தும் பார்க்கலாம்!



தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன ...... தந்ததான

......... பாடல் .........

ஏது புத்திஐ யாஎ னக்கினி

யாரை நத்திடு வேன வத்தினி

லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்


றேயி ருக்கவு நானு மிப்படி

யேத வித்திட வோச கத்தவ

ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்


பாதம் வைத்திடை யாதே ரித்தெனை

தாளில் வைக்கநி யேம றுத்திடில்

பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்


பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்

யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ

பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ


ஓத முற்றெழு பால்கொ தித்தது

போல எட்டிகை நீசமுட்டரை

யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே


ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்

மான்ம ழுக்கர மாட பொற்கழ

லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே


மாதி னைப்புன மீதி ருக்குமை

வாள்வி ழிக்குற மாதி னைத்திரு

மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே


மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ

லார்வி யப்புற நீடு மெய்த்தவர்

வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன

தான தத்தன தான தத்தன ...... தந்ததான

****************

......... பொருள் .........

[வழக்கம்போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்! ]

ஓத முற்றெழு பால்கொ தித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே


ஓதம் உற்று எழு பால் கொதித்தது போல
எண் திகை நீச முட்டரை ஓட வெட்டிய பாநு சத்தி கை எங்கள்கோவே

நீர்கலந்தபாலை நெருப்பின்மீதுவைக்க
அது சூடாகிக் கொதித்து வரும்வேளை
நீர்வற்றிப் பாலெழுந்து பொங்குதல்போல்,
எட்டுத்திசையிருந்தும் ஈசல்போல் அழிந்துபடப்
போர்செய்யவந்த இழிந்த மூடரான அசுரரை
வெட்டிக் கொன்றிட்ட சூரியவொளிபோலப்
பிரகாசிக்கும் சக்திவேலைக் கையேந்திய
எங்கள் தலைவனே!

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
மான்ம ழுக்கர மாட பொற்கழ
லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே


ஓத மொய்ச்சடை ஆட உற்றுஅமர் மான் மழுக்கரம் ஆட
பொன்கழல் ஓசை பெற்றிடவே நடித்தவர் தந்தவாழ்வே

நீர்பெருகும் கங்கைநதி பொருந்திவரும் சடைமுடியாட
எழிலாகப் பொலிந்திருக்கும் மான் ஒருகரத்திலும்
மழுவென்னும் ஆயுதம் தாங்கிய மறுகரமும் அசைந்தாட
தாளகதி தவறாத நாட்டியத்தால் அசைந்தாடும்
பொன்னாலாகிய வீரக்கழல் இசைந்து ஒலிக்கவும்
ஆனந்த நடனமாடும் சிவனார் தந்த எங்கள்பெருவாழ்வே!

மாதி னைப்புன மீதி ருக்குமை
வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே


மா தினைப்புனம் மீது இருக்கும் மை வாள் விழிக் குறமாதினைத்
திரு மார்பு அணைத்த மயூர அற்புத கந்தவேளே

நம்பிராஜன் தினைப்புனத்தில் கவண்கல் வீசியள்ளும்
மைதீட்டிய வாள்போலும் விழிபடைத்த குறவள்ளியை
அன்புறத் தழுவி மாரணைத்துக் கொள்ளும் மயில்வாகனனே
அளப்பரிய ஆற்றலுடைக் கந்தனெனும் அரசனே!
அனைவராலும் விரும்பப்படுகின்றவரே!

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.


மாரன் வெற்றிகொள் பூ முடிக் குழலார் வியப்புற
நீடு மெய்த் தவர் வாழ் திருத்தணி மாமலைப்பதி தம்பிரானே.

அழகுக் கடவுளையே வெல்லும் படியான அழகுள்ள மாதர்கள்
மலரிட்டு முடிந்திருக்கும் நீண்ட கூந்தலைக் காட்டியும் கலங்காத
மெய்யான தவம் செய்யும் முனிவர்கள் நிறைந்துவாழும்
திருத்தலமாம் திருத்தணிகை மலைமீது வதியும் தலைவரே!

ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்கு


ஏது புத்தி ஐயா எனக்கு இனி யாரை நத்திடுவேன்
அவத்தினிலே இறத்தல் கொலோ எனக்கு

இனி எனக்கு என்ன புத்தி சொல்லப் போகிறீர்?
எவரை அண்டி இனி நான் பிழைத்திடுவேன்?
கதியேதுமின்றி வீணே இறந்துபடலே எனக்கு விதித்ததோ?

னி ...... தந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோ


நீ.. தந்தை தாயென்றே இருக்கவும் நானும் இப்படியே தவித்திடவோ
சகத்தவர் ஏசலில் படவோ

யாருமெனக்கு இல்லையெனில் இதனைப் பொறுக்கலாம்
ஆனால் தந்தையும் தாயுமாய் நீ எனக்கு இருக்கையிலே
இவ்வண்ணம் நான் தவித்தழிதல் தகுமோ?
உலகத்தவர் பழிச்சொல்லுக்கு ஆளாதலும் முறையோ?

ந கைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடை யா


நகைத்தவர் கண்கள் காணப் பாதம் வைத்திடு ஐயா

எனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிப்பவரெல்லாம் காணுமாறு
நின் திருமலர்ப் பாதங்களை என் தலைமீது வைப்பாய் ஐயா!

தே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யா


தெரித்து எனை தாளில் வைக்க நீயே மறுத்திடில்
பார் நகைக்கும் ஐயா


அப்படி நீ எனை நின் தாளிணையில் சேர்க்காவிடிலோ
இந்த உலகமே எனைப்பார்த்து எள்ளி நகையாடும் ஐயா!

த கப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோ


தகப்பன் முன் மைந்தன் ஓடிப் பால்மொழிக்குரல் ஓலம் இட்டிடில்
யார் எடுப்பது என வெறுத்து அழ பார் விடுப்பர்களோ

பால்மணம் மாறாப் பச்சிளங்குழந்தை தன்
தந்தை முன்னே சென்று நின்றுகொண்டுத்
தன் மழலைக் குரலெழுப்பி ஓலமிட்டு அழுகையிலே
யார் பெற்ற பிள்ளையோ இது என எவரேனும்
வெறுத்தொதுக்கி விட்டு விடுவரோ?

எ னக்கிது ...... சிந்தியாதோ


எனக்கு இது சிந்தியாதோ ?

[இதுவரை இப்படிப் புலம்பிய அருணையாருக்கு இப்போது சட்டென ஒரு எண்ணம் வருகிறது!
இந்த அடி வரை, திருமுருகனைக் கடிந்து எழுதிய பாடல் போலத் தோன்றிய இது,
இப்போது அருணையாருக்கே ஏற்பட்ட ஞானோதயமாக மாறுகிறது!]


இந்தச் சிந்தனை என் சிந்தையில்
எப்படித் தோன்றாமல் போயிற்று!
வருவான்! முருகன் அருள்வான்!
முருகனருள் முன்னிற்கும்!

[எனக் கூத்தாடுகிறார்! நாமும்தான்!]


அனைவரும் இப்பாடலை தினமும் ஓதி முருகப் பெருமானின் அருளைப் பெறுவோம்!
****************


**** அருஞ்சொற் பொருள் ****

நத்துதல் = பற்றுக்கோடாய் அணுகுதல்
ஓதம் = நீர், தண்ணீர்
நீச = இழிந்த
முட்டர் = மூடர்கள்
பானு = சூரியன்
மொய் = பொருந்தியிருக்கும்
மாரன் = மன்மதன்
நீடு = நீண்ட, அதிகமான
தம்பிரான் = தலைவர்
*******************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
******************************

அ.அ.திருப்புகழ் - 35 'எழுகுநிறை நாபி'

அ.அ.திருப்புகழ் - 35 'எழுகுநிறை நாபி'


திருக்கழுக்குன்றம் மேவிய திருமுருகனைக் குறித்த பாடல் இது! கார்த்திகைக் கார்த்திகைத் திருநாளில் இதனை இடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! முருகனருள் முன்னிற்கும்!

**** பாடல் ****

எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி
யிலகுமரன் மூவர் முதலானோர்


இறைவியெனு மாதி பரைமுலையினூறி

யெழுமமிர்த நாறு கனிவாயா


புழுகொழுகு காழி கவுணியரில் ஞான

புனிதனென ஏடு தமிழாலே


புனலிலெதி ரேற சமணர்கழு வேற

பொருதகவி வீர குருநாதா


மழுவுழைக பால டமரகத்ரி சூல

மணிகரவி நோத ரருள்பாலா


மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை

வளமைபெற வேசெய் முருகோனே


கழுகுதொழு வேத கிரிசிகரி வீறு

கதிருலவு வாசல் நிறைவானோர்


கடலொலிய தான மறைதமிழ்க ளோது

கதலிவன மேவு பெருமாளே.


*****************************


******* பொருள் *******

இந்த அரிய பாடல் திருமுருகனிடம் எதையும் வேண்டாமல் அவனைப் போற்றும் வண்ணம் அமைந்த ஒரு சிறப்புப் பாடல்!எனவே, முதலில் இருந்தே பார்க்கலாம்!

எழுகுநிறை நாபி அரி

பூ, புவ, சுவ, சன, தபோ, மகா, சத்தியமெனும்
ஏழுலகைத் தன்நாபியெனும் வயிற்றிலொரு

பந்தாகச் சுருட்டிய திருமாலும்


பிரமர்

படைத்தல் தொழில் செய்யும் பிரமன்

சோதி

ஒளிமயம் பொருந்திய உருத்திரன்

இலகுமரன்

இம்மூவர்க்கும் மேலான சிவனின் மைந்தன் திருக்குமரன்

மூவர் முதலானோர் இறைவியெனு மாதி
[மூவர் முதலானோர் இறைவி எனும் ஆதி]


மேற்சொன்ன மூவர்க்கும் ஏனைய தேவர்க்கும்
தலைவியாகி சிவனுடன் விளங்கும் ஆதியன்னை


பரைமுலையின் ஊறி எழும் அமிர்தம் நாறு கனிவாயா

உமையவளின் திருமுலையில் எழுந்துவரும் அருள்ஞானப் பாலினை அளவின்றிப் பருகி அதனில் ஊறித் திளைத்து மணக்கும் கனிபோலும் வாயினையுடைய திருக்குமரா!

புழுகொழுகு காழி

வாசனை நிறை புனுகு எங்ஙனும் மலிந்திருக்கும் சீகாழியெனும் திருப்பதியில்

கவுணியரில் ஞான புனிதனென

சைவம் தழைத்தோங்கும் கவுணியர் குலத்தினிலே
திருமுருகன் சொரூபமாய்த் திருஞானசம்பந்தரெனும்

புனிதனாய் அவதரித்து


ஏடு தமிழாலே புனலில் எதிரேற

இணையாக வளராமல் எதிர்த்தொழித்து அழிக்கவெனச்
சைவைத்தை வேரறுக்கும் வஞ்சநெஞ்சம் கொண்டவராய்ச்

சமணரெனும் சமயத்தவர் வாதுசெய்ய அழைத்திருந்தார்

மதுரைக்கு வருகைதந்து சத்திரத்தில் தங்கிவந்த

சம்பந்தர் எதிர்வந்து அனல்வாதம் செய்துவென்று

புனல்வாதம் செய்திடவும் இறையருளால் துணிந்திருந்தார்

ஏடெழுதி வைகையிலே மிதக்கவிட்டுப் பார்த்திடவே

வீணரவர் கொக்கரிக்க, இறையருளை மனம்வேண்டி

'வாழ்க அந்தணர்' எனும் ஏடெழுதி நீரிலிட்டார்

கூடவந்த ஏடெல்லாம் நீரலையில் கொண்டுசெல்ல

இந்தவொரு ஏடுமட்டும் எதிரெழுந்து நின்றதுவே

புனல்வாதம் வென்றதுவே புனிதரிவர் திருவருளால்!


சமணர் கழுவேற பொருத கவிவீர

வீண்வாது செய்திருந்த சமணரெல்லாம் தோற்றுவிட
தோற்றவர்க்கு விதித்தபடி எண்ணாயிரம் சமணரெல்லாம்

கழுமரத்தில் மாளச்செய்து சைவம் தழைக்கச்செய்யக்

கவிப்புலமை வீரம் காட்டிக் காத்திட்ட கவிவீரனே!


குருநாதா

சம்பந்தர் வடிவில் வந்துதித்த குருநாதனே!

மழுவுழை கபால டமரக த்ரிசூல மணிகர விநோதர்

அண்டிவரும் அடியாரின் பாவமெலாம் எரிக்கின்ற
மழுவென்னும் ஆயுதத்தை வலக்கையிலும்

இங்குமங்குமாய்த் துள்ளியோடி அல்லாடும்

மனமென்னும் மானை இடக்கையிலும்

அதிர்ந்துவரும் நாதவொலியால்

படைப்பினை நிகழ்த்திடும் உடுக்கினையும்

இச்சா,கிரியா,ஞானமெனும் மூவகைச்
சக்திகளை
மும்முனையாய்க் கொண்ட
திரிசூலமென்னும் ஆயுதமும்
செருக்குற்றப் பிரமனின்
ஐந்தலையில்
ஓர்தலையைக்
கிள்ளியெறிந்த கோபத்தால்
பாவம்வந்து சேர்ந்ததனால்

கையொட்டிக் கிடக்கும் மண்டையோடும்

மணியும் கைகளில் தாங்கிடும்

அற்புத உருவாம் சிவனாரின்


அருள்பாலா

அருளினால் தோன்றிட்ட சிவபாலனே!

மலரயனை நீடு சிறைசெய்தவன் வேலை
வளமைபெற வேசெய் முருகோனே


தன்னை மதியாத் தருக்கினில் கடந்த
பிரமனை அழைத்து ஆரென வினவ

செருக்குடன் "படைப்பவன்" எனவுரைசொன்ன

அயனை யுதைத்துத் தலையினில் குட்டிச்

சிறையினில் தள்ளி அயனவன் வேலையைத்

தானே நிகழ்த்திடப் பிரமனைப் போன்றே

ஒருமுகம், நாற்கரம் மாலை கமண்டலம்

கரங்களில் தாங்கிய பெருமையைப் பெற்ற

முருகப் பெம்மானே!


கழுகுதொழு வேத கிரி

கழுகுவந்து சிவம் தொழுதல்
யுகம்யுகமாய் நடக்குமிடம்


சண்டன், பிரசண்டரெனும்

இருகழுகு கிருதயுகத்தில்


சம்பாதி, சடாயுவெனும்

இருகழுகு திரேதத்தில்


சம்புகுத்தன், மாகுத்தன்

இருகழுகார் துவாபரத்தில்


சம்பு, ஆதியெனும்

இருகழுகார் கலியுகத்தில்


நாடோறும் நாடிவந்து

நண்பகலில் நான்மறையோதி


நல்லுணவு பெற்றுச்செல்லும்

நிகழ்வின்னும் நடக்குமிடம்


கழுகுவந்து பூசித்தலின்

கழுக்குன்றம் எனுமிந்த வேதகிரி


சிகரி வீறு கதிர் உலவு வாசல் நிறை வானோர்
கடல் ஒலியதான மறைதமிழ்கள் ஓது


மலைமுகட்டின் மணிமீது ஒளிபொங்கும் வாசல்முன்
நிறைந்ததொரு கூட்டமாய்
மறையோதும் வானவரும்
அழகுதமிழ்ப் பாடல்சொல்லும்
குரலொலிகள்
கடலலைபோல்
பெருத்தவொலி நிறப்பிவர
வணங்கிநிற்கும் செயல்புரியும்


கதலிவன மேவு

வாழைமரம் பெருகிநின்று தலைவளைத்துக்
குலைதள்ளும்
பெருவனமாய்ப் பொலிந்திருக்கும்
கழுக்குன்றம் தனிலுறையும்


பெருமாளே.

பெருமைமிகு முருகக் கடவுளே!
**********************
அருஞ்சொற் பொருள்:

எழுகு = ஏழு உலகு என்பதின் திரிபு
பரை = மேலான உமாதேவி

நாறு = வாசனை, மணம்

புழுகு = புனுகு என அழைக்கப்படும் வாசனைப் பொருள்

உழை = மான்

டமரகம் = உடுக்கு

விநோதர் = அற்புதமானவர்

அயன் = பிரமன்

கதலி = வாழை

******************
அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
**********************

"அறுபடைக் குமரன் அருட்டிரு மாலை" [கந்தர் சஷ்டிப் பதிவு]

"அறுபடைக் குமரன் அருட்டிரு மாலை" [கந்தர் சஷ்டிப் பதிவு]


காப்பு


அறுபடைக் குமரனின் அருட்டிருத் துதிகளை
குருவடிப் பணிந்து குற்றமின்றி யான்பாட

அருகம்புல் தலைக்கணி ஐங்கரன் கணபதி
திருத்தாள் என்றுமென் காப்பு.

1. திருப்பரங்குன்றம் [முதல் படைவீடு]

அரனவன் அளித்த அருமறைக் கொழுந்து

நரனிவன் எனக்கவன் அருமறை மருந்து
பரனவன் அமரும் பரங்குன்றைத் தொழுவோ
ம்
மறமெலாம் ஒழித்து மங்களம் அருள்வான்!

2. திருச்செந்தூர்[திருச்சீரலைவாய்] [இரண்டாம் படைவீடு]

மலையைப் பிளந்து மாமரத்தைப் பிளந்து

வேலை விடுத்து அவுணரை அழித்து

அலையும் தேவரின் துயரம் தீர்த்த

அலைவாய் அழகன் தாளடி பணிவோம்.

3. பழநி [மூன்றாம் படைவீடு]

பழத்தினை வேண்டிப் பாரெலாம் திரிந்து
வேழன் பறித்திடக் கோபம் கொண்டு
முழத்துணி யுடுத்தித் தண்டம் தாங்கிய

பழநி யாண்டியின் பதமலர் பணிவோம்.

4. சுவாமிமலை[திரு வேரகம்] [நான்காம் படைவீடு]

உருவெனத் திகழ்ந்தது பிரமனைக் கடிந்தது
கருவெனும் வேதப் பொருளது வினவிய
பெருமகன் தனக்குப் பிரணவம் சொன்னது
குருவென அமர்ந்தது ஏரகப் பதியினில்.

5. திருத்தணி [குன்று தோறாடல்] [ஐந்தாம் படைவீடு]

அன்றோர்நாள் சூரனை வேல்கொண்டு அழித்ததுவும்
குன்றத்தில் சினந்தீர வேல்கொண்டு நின்
றதுவும்
மன்றாடி வள்ளிபதம் பிடித்தங்கு கொஞ்சியதுவும்
குன்றுதோ றாடிவரும் குமரவனிவன் கருணையன்றோ.

6. பழமுதிர் சோலை [ஆறாம் படைவீடு]

விழுந்தவர் எழுந்திட வேல்கொண்டு காப்பான்
எழுந்தவர் பணிந்திட மயிலினில் வருவான்
தொழுதவர் அடியவர் துயர்களைத் தீர்ப்பான்
பழமுதிர்ச் சோலைப் பரமனடி பணிவோம்.

நூற்பயன்
அருட்டிருமாலை அனுதினமோதிட
இருட்டறுச்செய்து இன்னல்கள் மாய்த்து
பொருட்டிருவடிவினில் ஒன்றிடவைத்து

விரட்டிடுவினைகளை ஒழிந்திடச்செய்வான்.

வாழ்க சீர் அடியாரெல்லாம்!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!!
**********************************

"அ.அ. திருப்புகழ் - 34 "பாதி மதி நதி"

"அ.அ. திருப்புகழ் - 34 "பாதி மதி நதி"


அடுத்து எதை எழுதலாம் என எண்ணியபோது திரு. ராமச்சந்திரன் என்னும் அன்பர் ஒருவரிடமிருந்து வந்த வேண்டுகோளுக்கிணங்க இந்தப் பாடலுக்கு பொருளெழுத எண்ணி அதை எழுதியும் முடித்த பின்னர், ஏதோ ஒரு நினைவில் பழைய பதிவுகளைப் புரட்டியபோது, இதற்கு ஏற்கெனவே பொருள் எழுதியது தெரிந்தது!
அதுவும் எனது நண்பர் ரவி கேட்டதன் பேரில்தான் எழுதியிருக்கிறேன்!
ஆனால், அதையும், இதையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், இதில் இன்னும் விவரித்துச் சொல்லியிருப்பது தெரிய வந்தது!
இதுவும் முருகன் திருவுளம் என மகிழ்ந்து, சுவாமிமலை நாதன் புகழ் பாடும் இந்தப் பதிவை இடுகிறேன்.
நானே[!!] சுருக்கமாகச் சொன்னது அவனுக்குப் போதவில்லை போலும்!

ரவி அன்புடன் அனுப்பிய ஒளிப்பேழை இதோ!
முருகனருள் முன்னிற்கும்!!
********************************

******* பாடல் ********

தான தனதன தான தனதன

தான தனதன ...... தனதான


பாதி மதிநதி போது மணிசடை

நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்

பாதம் வருடிய மணவாளா


காது மொருவிழி காக முற அருள்

மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு

காலில் வழிபட அருள்வாயே


ஆதி அயனொடு தேவர் சுரருல

காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்

சூழ வரவரு மிளையோனே


சூத மிகவளர் சோலை மருவுசு

வாமி மலைதனி லுறைவோனே

சூரனுடலற வாரி சுவறிட

வேலை விடவல பெருமாளே.


**********************************


****** பொருள் *******

[வழக்கம்போல் பின் பார்த்து முன் பாதி பார்க்கலாம்!]

ஆதி அயனொடு தேவர் சுரருல

காளும் வகையுறு சிறைமீளா


ஆதி அயனொடு தேவர் சுரர் உலகு ஆளும் வகையுறு சிறைமீளா


தன்னை மதியா தருக்கினராகி
மமதை கொண்ட பிரம தேவனை
ஓமெனும் பொருளின் உண்மை கேட்டிட
விழித்திட்ட பிரமனின் தலையில் குட்டித்
தரையினில் தள்ளிச் சிறையினில் இட்டுப்
படைப்புத் தொழிலும் தான் கையெடுக்க,
பிரமனைச் சிறைவிட வேண்டிய சிவனார்
மனமகிழும்படிப் பொருளும் உரைத்து
அயனை அன்று சிறை விடுத்தாய்!

சூரனின் கொடுமையால் சிறையில் வாடிய
தேவரின் குறையைத் தீர்த்திட வேண்டி
சிவனார்கண்ணின் தீப்பொறி கிளம்பி
கங்கையடைந்து அதுவும் வறளச்
சரவணப்பொய்கையில் கமலங்கள் நடுவே
ஆறுகுழந்தைகள் அவதரித்திருக்கக்
கார்த்திகைப் பெண்டிர் முலைப்பால் அருந்தி
அன்னை பார்வதி அணைப்பினில் சேர்ந்து
ஆறுமுகத்தான் திருவுருக் கொண்டு
அன்னை தந்த சக்திவேல் தாங்கி
சூரனை அழித்து இருகூறாய்ப் பிளந்து
அமரர்கள் அனைவரைச் சிறையும் விடுத்தாய்!

பிரமனும் தேவரும் தேவருலகினை
மீண்டும் ஆண்டிட அருளும் செய்தாய்!

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வரவரு மிளையோனே


ஆடுமயிலினில் ஏறி அமரர்கள் சூழ வரவரும் இளையோனே


ஆடிவரும் அழகுமயில் மீதேறி
அமரர்கள் அனைவரும் கூட்டமாகச்
சூழ்ந்துவர பவனி வரும் இளமைகுன்றா
எழிலுடையவரே! கணபதிக்கு இளையவனே!

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே

சூதம் மிகவளர் சோலைமருவு சுவாமிமலைதனில் உறைவோனே


மாமரங்கள் மிக வளர்ந்து
அடர்த்தியான சோலையாகி
அத்தகு சோலைகள் சூழ்ந்திருக்கும்
சுவாமிமலை என்னும் திருத்தலத்தில்
வாழுகின்ற முருகப் பெருமானே!

சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.


சூரன் உடல் அற வாரி சுவறிட வேலை விட வல பெருமாளே.


அடாது செய்த சூரனுடல்
விடாது கொன்றழிக்க
தொடர்ந்து துரத்திவந்து
காணாது சென்றொளிந்த
கடலையும் வற்றிடச்செய்து
சூரனுயிர் மாளச்செய்யும்
வல்லமை படைத்திட்ட
வீரவேலைக் கையிலேந்திய
பெருமைக்குரிய தலைவனே!

பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா


பாதிமதி நதி போதும் அணிசடை நாதர் அருளிய குமரேசா


முழுநிலாய்ச் சந்திரன் பொலிந்திருந்த முன்னொருநாள்!
எழுமாலைப் பொழுதினிலே கண்டவரும் காமுறுவர்!
அப்படித்தான் கொண்டனரே இருபத்து எழுமரெனும் குமரியரும்!
பெருமைமிகு தக்கனின் அருந்தவப் புதல்வியவர்!
சேர்ந்திணைந்து வாழ்கவெனச் சந்திரனை மணமுடித்தார்!
சேர்ந்தவரும் மகிழ்வுடனே சிலகாலம் இருந்திட்டார்!
ஒருவர்மீது மட்டுமவன் பேரன்பு செலுத்துதலால்
மனங்கொதித்த தக்கராஜா சந்திரனைச் சபித்திட்டார்!
கலையெல்லாம் அழிந்துபோய் கருநிலவாய் ஆகவென!
பயங்கொண்ட நிலவரசன் சிவனாரை அண்டிநின்றான்!
அண்டிவந்து நின்றவரின் அடுதுயரம் தீர்ப்பவனாம்
சிவானரும் மனமிரங்கி அவன் குற்றம் பொறுத்திட்டார்!
தலைமீது சூடியவன் பெரும்பயத்தை நீக்கிவிட்டார்!
பிறைமதியைத் தலைசூடிய பெம்மான் எனும் பெயர் பெற்றார்!

பெற்றவர்க்குச் செய்கடனாய் கங்கைநதி வேண்டுமெனப்
பகீரதன் எனுமரசன் கடுந்தவமும் செய்திருந்தான்
தேவலோக மங்கையிவள் கங்கையெனும் புண்ணியளைப்
பூலோகம் வரச்சொல்லி விண்ணவரும் வரம் தந்தார்!
மனமில்லாக் கங்கயன்னை மாறாத கோபங்கொண்டு
அலைகடலெனப் புரண்டுவர அண்டமெலாம் நடுங்கியதே!
அமரரெலாம் பதைபதைத்து அரன்பாதம் பணிந்திட்டார்!
அன்புகொண்ட அரனாரும் கங்கையளைத் தலைக் கொண்டார்
தம்சடையில் எடுத்தணிந்தார் கங்கையளும் மறைந்துபோனாள்!
போகுமிடம் தெரியாமல் கங்கையன்னை அலைந்திட்டாள்
அகமழிந்து அடிபணிந்து காத்தருள வேண்டிட்டாள்
அன்புருவாம் அருட்சிவனும் அவள்மீது கருணைகொண்டார்
தம்சிரசில் என்றென்றும் இருந்திடவே அருள்செய்தார்!
ஒருசடையைப் பிரித்தங்கே சிறுநதியாய் செல்லவிட்டார்
பகீரதன் பின்னாலே அடக்கமுடன் கங்கை சென்றாள்!
கங்கையினைச் சடையணிந்த புனிதனெனச் சிவனானார்!

கொன்றையெனும் மலர்க்கொத்தும் சிவனாரின் தலையிருக்கும்!

நிலவையும், கங்கையையும், கொன்றை மலரும் தலைக்கணியும்
சிவனாரின் குமரனாக வந்துதித்த குமரேசக் கடவுளே!


பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா


பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய மணவாளா

தேனினும் இனியவள் தினைப்புனம் காத்தவள்
வள்ளியெனும் குற நல்லாள் - அவள்
வடிவும் தேனே குணமும் தேனே
குரலும் தேனின் இனிமையொக்கும்

குரலின் இனிமையைக் கேட்டிட்ட குமரன்
குமரியின் பாதம் வருடுகிறான் - அவள்
சிலிர்த்திடும் சிரிப்பினில் சிந்திடும் தேனைக்
காதால் கேட்டு மகிழுகிறான்

கன்னியொருத்தியின் பாதம் எவரும் பற்றுவதில்லை
மகளிர் ஆடவர் காலில் விழுந்து பணிவது உண்டு
திருமணநாளில் மிஞ்சி அணிந்திட மெல்லக் குனிந்து
கணவன் ஒருவனே கால்களைப் பற்றுவான்

குமரியின் பாதம் தொட்டிடும் உரிமை
கணவர்க்கு மட்டுமே உரியதெனும்
சீரிய கருத்தினை இங்கே சொன்னார்
மணவாளன் எனும் சொல்லின் மூலம்!

காது மொருவிழி காக முற அருள்
மாய னரிதிரு மருகோனே


காதும் ஒருவிழி காகம் உற அருள் மாயன் அரி திரு மருகோனே


அன்னையைக் கண்டுபிடிக்கும் அண்ணலவன் ஆணையேற்று
தென்புலத்தை நோக்கிச்சென்ற அங்கதனின் சேனையரும்
அன்னையைக் காணாமல் அகம்குலைந்து அல்லலுற
சம்பாதி சொற்கேட்டு விண்ணிலேறிக் கடல்தாண்டி
இலங்கையினுள் புகுந்திட்டு எங்கெங்கும் தேடி
அசோகவனத்தினிலே அன்னையவள் வீற்றிருக்கும்
அருட்கோலம் கண்டவுடன் அகம்களித்து அடிபணிந்து
கணையாழி தான்கொடுத்து அடையாளம் சொன்னவுடன்
அன்னையவள் அன்புடனே அனுமனவன் முகம்பார்த்து
அன்றோர்நாள் நிகழ்வொன்றை அவனுக்குச் சொல்லலானாள்:

'தாய்சொல் தவறாமல் தம்பியுடன், தாரத்துடன்
கானகம் சென்றராமன் சென்றடைந்தான் சித்திரகூடம்
வனத்திடை படர்ந்திருக்கும் மலையடிவாரம்
முனிவரும் சித்தரும் தவம்செயும் காடு

மந்தாகினி நதியங்கு மலைவளத்தைக் கொண்டுவந்து
சோலைவனம் என்றாக்கிப் புள்ளினத்தைச் சேர்த்திருக்கும்
கண்ணுக்கு விருந்தாகக் காட்சிக்கு அருமையதாய்
நல்லதோர் இடத்தினிலே நாங்களெல்லாம் தவமிருந்தோம்.

நல்லதோர் மாலைப் பொழுது நாயகனும் களைப்புற்றான்
என்மடியில் தலைவைத்து கண்ணுறங்கத் தொடங்கிவிட்டான்
தலைவனவன் கண்ணுறங்கத் தனியளாக நானிருந்தேன்
கண்ணுறக்கம் கொள்ளாதுப் பதுமையென அமர்ந்திருந்தேன்

வான்வழியே சென்றிருந்த சயந்தனெனும் இந்திரனும்
என்னழகைக் கண்டங்கே கணப்பொழுதில் காமுற்றான்
காகமாக உருவெடுத்து எனைத் தீண்ட எண்ணங்கொண்டான்
கூரானத் தன்னலகால் என் தனங்கள் கொத்திவந்தான்

சீராகக் குருதிபொங்கி என் தலைவன் முகத்தில்விழ
துணுக்குற்று எழுந்தவனும் என்நிலையைக் கண்டிட்டான்
எவரிழைத்த கொடுமையெனச் சீற்றம்மிகக் கொண்டிட்டான்
காகத்தை நான்காட்டி நடந்தனைத்தும் கூறிநின்றேன்

ஏனென்னை எழுப்பவிலையென வருந்தியவன் கேட்கத்
தேவரீர் உறங்குகையில் தொல்லைசெய்யக் கூடாதென்றேன்
ஆறாத கோபத்துடன் காகத்தை நோக்கினான்
படுத்திருந்த பாயினின்று புல்லொன்றைக் கிள்ளினான்

'காதும்' [கொல்லும்] எனச்சொல்லி அப்புல்லை வீசினான்
வல்லவன் கையினிலே புல்லும் ஆயுதமெனும்
சொல்லுக்குக் காரணமாய் அப்புல்லும் அஸ்திரமாகி
காகத்தைவிரட்டியது! சயந்தன் வெருண்டோடினான்

மூவுலகும் சுற்றியங்கு கடவுளரிடம் வேண்டினான்
ஏதும் செய்ய இயலாதென அனைவருமே கைவிரித்தார்
சிவனடியில் அவன்பணிந்து காத்தருள வேண்டினான்
எய்தவர்க்கே மன்னிக்கும் மரபுண்டு எனச்சொல்லி

இராமனிடம் சென்றங்கு மண்டியிடச் சொல்லிவிட்டார்
சித்திரகூடம் சென்றடைந்து என்பதியின் அடிவீழ்ந்து
இராமா அபயம்! இரகுவீரா அபயம்! தாசரதே அபயம்!
காத்தருள வேண்டுமெனக் காகமும் கதறியது!

தஞ்சமென வந்தவரைக் காப்பதெங்கள் குலவழக்கம்
அபயமெனக் கேட்டதனால் நின்னுயிரைக் காத்திடுவேன்
ஆயினும் ராமபாணம் வீணாகிப் போவதில்லை
பிறன்மனை நோக்கிட்ட நின்கண்ணொன்றைக் கொண்டுசெல்லும்

எனச்சொல்லி அருள்சுரக்கக் காகமொரு கண்ணிழந்தது
அருங்குற்றம் செய்தவர்க்கும் அபயமளிக்கும் அண்ணலவன்
இக்கதையைச் சொல்லியென்றன் பதியின் துன்பம் போக்கிடுவாய்'
எனச் சொன்னாள் அன்னை! அனுமனும் விரைந்தான்!

இத்தகைய பெருமைபெற்ற இராமனின் மருகனே
என்குற்றம் பொறுத்தென்னைக் காத்தருள்க முருகனே!


கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே


காலன் எனை அணுகாமல் உனது இரு காலில் வழிபட அருள்வாயே


அடைக்கலமாய் வந்தாலும் அகங்காரம் கொண்டாலும்
அபயமெனச் சொன்னாலும் அன்புடனே அருள்புரியும்
பரமசிவன் மைந்தனே! திருமாலின் மருகோனே!
தக்கன்சாபம் சந்திரனை, ராமபாணம் காகத்தைத்
துரத்திவந்து பேரழிவாய்த் தாக்குதல்போல் இங்கென்றன்
உயிர்கொண்டு செல்லவரும் காலன் என்னைக் குறிவைத்து
அச்சுறுத்தும் வடிவினிலே வந்திடாமல் காத்திருந்து
நின் திருவடித் தாமரையில் அடைக்கலமாய் எனையேற்று
தொழுதுய்ய அருள்புரிய வேண்டுகிறேன்! காத்தருள்வாய்!

********************

அருஞ்சொற்பொருள்:

போதும் - கொன்றை முதலிய மலர்களையும்
காதும் = கொல்லும்
அரி = ஹரி
காலன் = எமன்
ஆதி அயன் = அனைத்துக்கும் முதலான படைப்புத் தொழில் புரியும் பிரமன்
சுரர் உலகு = தேவ லோகம்
சூதம் = மாமரம்
வாரி = கடல்
சுவறிட = வற்றிப் போகுமாறு
வல = வலிமை பொருந்திய

****************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
*****************************

http://www.youtube.com/watch?v=FDMcv6CjglI