Wednesday, July 22, 2009

"அ. அ. திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"

"அ. அ. திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"


இந்தத் திருப்புகழ் பலரும் அறிந்த ஒரு புகழ்!
இசைநிகழ்ச்சிகளில் அடிக்கடி பாடப்படும் பாடல்.
மதுரை சோமு மிக அருமையாகப் பாடுவார் இதை!
இன்றையப் பதிவில் இந்த எளிய, பொருள் நிறைந்த பாடலின் புகழ் பார்க்கலாம்! முருகனருள் முன்னிற்கும்!


****** பாடல் ******

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்


இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்


மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே


செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.


****** பொருள் ******
[பின்பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பார்க்கலாம்!!]

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி

[அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி]

'அகரமும் ஆகி'

எழுத்துகளின் தொடக்கம் அகரம்
உயிர்களின் தொடக்கம் இறைவன்


பிறவெழுத்துகளின் இயக்கமும் இதனால்

உயிரும் உலகும் இறையின்றி இயங்கா


அனைத்தெழுத்திலும் உன்னி நின்றிடும் அகரம்

அனைத்துயிரிலும் மறைந்திருப்பவன் இறைவன்


அகரம் சொல்லிட அதிகச் சிரமமில்லை

இறைவன் இயக்கமும் தானாய் நிகழும்

அ,உ,ம, எனும் மூவெழுத்து இதனுள்

முத்தொழிலும் இறைவன் கையில்


அருளெழுத்தாம் 'வ'கரமும் அகரத்துள்

அருளைத் தருபவன் எம்முடை இறைவன்


தொலைவையும் சுட்டும் 'அ'வெனும் எழுத்து

எட்டிநிற்பினும் அருள்வான் இறைவன்

இத்துணை பெருமை கூடிய அகரமும் ஆகி,


'அதிபனும் ஆகி'

'எந்தக் கடவுளும் என் தோள் போழ்
கந்தக் கடவுளை மிஞ்சாதே'எனும்

பாம்பன் சுவாமியின் வாக்கிற்கொப்ப

தனிபெருந் தலைவனாய்த் திகழ்பவனாகி,


'அதிகமும் ஆகி'

தெய்வங்கள் பலவுண்டு இத்திருநாட்டினிலே
அனைத்துக்கும் அதிகமாய் நிற்பவன் முருகன்

'சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை
சுப்ரமண்யர்க்கு மிஞ்சிய தெய்வமுமில்லை' எனும்

பழமொழிக்கேற்ப அதிகமானவானுமாகி,


'அகம் ஆகி'

முத்தி பெறும் அனைவருமே அகத்துள் செல்வர்
அகத்தில் உறைபவன் அழகிய முருகன்

வீடு பேற்றினை நல்கிடும் நல்லருட் தெய்வமுமாகி
,

'அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்'

படைப்பினைச் செய்திடும் பிரமனுமாகி
காத்தலை நிகழ்த்திடும் மாலுமாகி
அழித்திடச் செய்யும் உருத்திரனுமாகி
அவர்க்கும் மேலாய் அற்புதம் காட்டும்
அழகிய முருகனுமாகி,

'இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே'
[இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே]

தொலைபொருள் காட்டும் அகரமும் ஆனவன்
அருகினில் இருக்கும் இகரமும் ஆகி
அண்டிடும் அடியர்க்கு நல்லருள் புரிவான்

காற்றாகிக் கொடியாகி கானகமுமாகி
ஊற்றாகி உயிராகி உள்ளவை யாவுமாய் ஆகி
தோற்றுவிக்கும் அத்தனையும் தானேயாகி
ஆற்றல்நிறைப் பரம்பொருளாய் யாவுமாகினான்

கனியிலும் இனியன் கரும்பினும் இனியன்
பனிமலர்குழல் பாவையரினும் இனியன்
தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன்
உயிரினும் இனியன் உணர்வினும் இனியன்
இனிக்கும் இனிமையாய் வருபவன் முருகன்


'இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்'
[இருநிலம் மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்]

பூவுலகில் வாழ்கின்ற அனைத்துயிரும் நலம்வாழ
எனதுமுன்னே நீ விரைந்தோடி வரவேணும்


'மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே'
[மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே]

அசுவமேத யாகம்பல செய்ததனால்
யாகத்தின் அதிபதியெனப் பெயர் பெற்று
வலன் எனும் அரக்கனை அழித்தமையால்
வலாரியெனப் புகழ்பெற்ற இந்திரனும்
தம்மகளாம் தெய்வநாயகி மணாளனின்
பேரழகைக் கண்டு மனதிலங்கு வியந்து
மகிழ்வுடனே போற்றும் வடிவழகு பொருந்தியவனே

'வனமுறை வேடனருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே'

வனத்தில் வாழ்ந்தான் வேடனொருவன்
தனக்குள் ஆசையை அவனும் வளர்த்தான்
மனமயில் முருகனின் பூஜனை செய்திடும்
நினைவினில் அவனும் கோயிலை அடைந்தான்

கையினில் கனிகளும் கொம்புத்தேனும்
கொய்திட்ட புதுமலர்க் கொத்தும் கொண்டு
பையவே நடந்தான் கதிர்காமக் குமரனின்
மெய்வழிச் சாலையின் கோவிலை நோக்கி

செய்திட்ட பூஜையில் முருகன் மகிழ்ந்தான்
வந்திட்ட வேடனின் பூஜனை ஏற்றான்
மந்திரமில்லப் பூஜையிலும் மகிழ்வான்
மனமதிலொன்றி மகிழ்வுடன் செய்தால்

'செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே'

பொருந்திடும் போரில் வருந்திடும் உயிர்கள்
எழுந்திடும் விழுந்திடும் அவுணரின் உடல்கள்
வேலனின் மயிலின் போரதில் மாயும்
செககணசேகு தகுதிமிதோமி எனவெழும்
மயிலின் மீதினில் அமர்ந்து அடிடும் முருகோனே


'திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே'

செல்வம் மலிந்து கிடக்கும்
பழமுதிர்ச்சோலை மலையின்மீது
பெருமையுடன் அமர்ந்திருக்கும்
மனமயில் முருகோனே!
***********

****** அருஞ்சொற்பொருள் ******

அகரம் = 'அ' எனும் முதல் எழுத்து
அதிபன் = பெருந்தலைவன்
அயன் = பிரமன்
அரி = திருமால்
அரன் = சிவன்
இகரம் = சமீபத்தில் இருப்பவர்
இருநிலம் = பெரிய நிலம்
மகபதி = ஆயிரம் யாகம் செய்தவன்
வலாரி = வலன் எனு அசுரனைக் கொன்ற இந்திரன்
திரு = செல்வம்
***********

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
*********************************

Tuesday, July 21, 2009

அருணையார் அருளிய திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"

அருணையார் அருளிய திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"


மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், இன்று ஒரு திருப்புகழ்!
மாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
முருகன் அருள் செய்ய வேண்டும்.

இன்றைய திருப்புகழ் கொல்லிமலை முருகனைப் போற்றிப் பாடியருளியது. பரமானந்தக் கடலில் நானும் மூழ்க அருளிச் செய்யப்பா என வேண்டுகிறார் அருணையார்!
இப்போது இந்த அழகிய பாடலைப் பார்ப்போம்!
முருகனருள் முன்னிற்கும்!!
********************************

***********பாடல்***********

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த மெனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகி
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த
பௌவமுற வேநின்ற தருள்வாயே

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று குழலூதுங்
கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற பெருமாளே.

இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பாடல்! பொருளறியும் போது புரியும்! வழக்கம் போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

********** பொருள் *********

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று குழலூதுங் கையன்

கல் உருகவே இன்கண் அல்லல்படு கோ அம்
புகல் வருகவே நின்று குழல் ஊதும் கையன்

குழலூதி நின்றால் கல்லும் உருகிவிடும்
புகலிடம் ஏதென்று அல்லல் படுகின்ற
ஆவினங்களுக்குச் சொந்தயிடம் இதுவென்று
புரிந்திடும் வண்ணம் புல்லாங்குழல் எடுத்து
இனியகானம் இசைக்கின்ற கண்ணனெனும்

மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா

மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை
கைதொழ மெய்ஞ்ஞானம் சொல் கதிர்வேலா

திரிபுரம் எரிக்கப் புறப்பட்ட வேளையில்
விநாயகனை வணங்காமல் தேவர்கள் தொடங்க
தேரின் அச்சு முறிந்து வீழ்கையில்
இடபமாக வந்து நின்று திருமால்அருள
அதன்மீது ஏறியருளிய பெருமானாம்
மெலிந்த சடைகளை உடைய எந்தைபிரான்
சிவனாரும் கைதொழுது நின்று
ஓமெனும் பிரணவத்தின் பொருளை அறியவேண்டி
பணிந்து நின்று கேளெனச் சொல்லி
பிரணவப் பொருளினை அருளிச் செய்த
ஆதவன்போல ஒளிபொருந்திய
வேலினைத் தாங்கும் முருகோனே!

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற பெருமாளே

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமே சென்று
கொள்ளைகொளும் மாரன்கை அலராலே
கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா! கந்த!
கொல்லிமலை மேல் நின்ற பெருமாளே!

தினைப் புனத்தைக் காவல் செய்யவேண்டி
கையில் கவண்கல் எடுத்து வந்து
ஆலோலம் பாடிநின்ற வள்ளிநாயகியாரின்
புனத்தை நாடிச்சென்று காதலுணர்வைக்
கூட்டித்தரும் மன்மதன் எறிகின்ற மலர்க்கணை
விளைவித்த காதல் பெருக்கினால் ஆட்பட்டு
கையில் கிடைத்த தழைகளையெல்லாம் பறித்துக்கொண்டு
சென்ற கட்டழகு உடையவனே! கந்தக் கடவுளே !
கொல்லிமலைமீது வீற்றிருக்கும்
பெருமை மிகுந்த சிறந்தவனே!

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த மெனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்

தொல்லைமுதல் தான் ஒன்று மெல்லி இரு பேதங்கள்
சொல்லு[ம்]குணம் மூ[ன்று] அந்தம் எனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து
தொய்யு பொருள் ஆறு அங்கம் என மேவும்

[இந்த வரிகள் ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகிய கவித் திறத்தைக் காட்டுகின்றது.]

பழைமை எனவரும் இறைவனே முதல்வன்

சக்தியும் சிவனுமாய் இருவராகி அருள் புரிவான்

சத்துவம், இராஜஸம், தாமஸம் என்னும்
முக்குணங்களின் சொரூபமாய் விளங்கும்
அயன்,அரி,அரன் என்பவரின் மூலமாய் விளங்குவான்

ருக்,யஜுர்,சாம, அதர்வணம் என்னும்
நான்கு வேதங்களின் ஆதியாய்த் திகழ்வான்

சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்னும்
ஐந்து புலன்களையும் வென்றவனும் இவனே

நாசி வழியே உருவாகும் எழுத்துகளின் ஒலியானவன்
வாய் வழியே எழுந்த ஒலியின் விளைவாய் மகேச்வர சூத்திரம் என்னும் இலக்கணம் பிறப்பித்தவன்
கவிதைகளின் பாதம் போலும் சந்தஸ்
இதனுதவி இல்லாமல் எழுதும்கவி நிலைக்காது
இத்தனை இத்தனை எழுத்து, மாத்திரை என வரையறுக்கும்
கால் போலும் சந்தஸை உருவாக்கியவன்
எதனால் இப்பதம் இங்கு வந்ததென உணர்விக்கும்
நிகண்டு எனப்படு நிருக்தம் காதுவழியே தந்தவன்
காணும் பொருளைக் காட்டுவிக்கும் கண்போல
விளைவதைக் காட்டும் ஜோதிடம்எனும் கண்ணானவன்
இன்னின்ன செயல் செயும் கைகள்போலானவன்

என எம்மை சோர்வடையச் செய்யும்
ஆறு அங்கங்களை உடையவனாகி

[இவற்றை எல்லாம் விட்டால்தான் அவன் தெரிவான்! அறிவழிந்தாலே அவன் அகப்படுவான்!]

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகி
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த
பௌவமுற வேநின்ற தருள்வாயே .

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள்
பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி
பல்லுயிருமாய் அந்தம் இல்ல[லா] சொரு[ரூ]ப ஆனந்த
பௌவம் உறவே நின்றது அருள்வாயே

ஒலிக்கின்ற ஓசையெலாம் நீயே ஆனாய்
வாழுமுலகில் கட்டிவைக்கும் பசு பாசங்களானாய்
வெள்ளமெனப் பெருகிவரும் தீந்தமிழில் பொருந்தி நின்றாய்
மனதை மயக்கும் இசையாகவும் ஆனாய்
அத்தனை உயிர்களிலும் வாழும் ஒரே உயிருமானாய்
இதன் காரணமாகவே முடிவே இல்லாதவனும் ஆனாய்
இத்தனையும் நிறைந்த ஆனந்த உருவக் கடலும் ஆன

இவைஅத்தனையும் கூட்டிவந்து நிலையாய் அளிக்கவல்ல
அந்தப் பொருளை எனக்குக் காட்டி அருள்வாயே!
*****************

******அருஞ்சொற்பொருள்*******

வெய்ய = கொடிய
தொய்யு பொருள் = சோர்வடையச் செய்யும் பொருள்
அல்க = தங்க
பௌவம் = கடல்
புகல் = அடைக்கலம்
மிசை = மீது
நொய்ய = மெலிதான, நுண்மையான
எந்தை = எம் தந்தை
மாரன் = மன்மதன்
மழவன் = கட்டான உடலை உடைய இளைஞன்
********************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
******************************