Tuesday, July 21, 2009

அருணையார் அருளிய திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"

அருணையார் அருளிய திருப்புகழ் - 31 "தொல்லை முதல் தானொன்று"


மீண்டும் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், இன்று ஒரு திருப்புகழ்!
மாதம் இரு முறையாவது எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
முருகன் அருள் செய்ய வேண்டும்.

இன்றைய திருப்புகழ் கொல்லிமலை முருகனைப் போற்றிப் பாடியருளியது. பரமானந்தக் கடலில் நானும் மூழ்க அருளிச் செய்யப்பா என வேண்டுகிறார் அருணையார்!
இப்போது இந்த அழகிய பாடலைப் பார்ப்போம்!
முருகனருள் முன்னிற்கும்!!
********************************

***********பாடல்***********

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த மெனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகி
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த
பௌவமுற வேநின்ற தருள்வாயே

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று குழலூதுங்
கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற பெருமாளே.

இது ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த பாடல்! பொருளறியும் போது புரியும்! வழக்கம் போல் பின் பார்த்து, முன் பார்க்கலாம்!

********** பொருள் *********

கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று குழலூதுங் கையன்

கல் உருகவே இன்கண் அல்லல்படு கோ அம்
புகல் வருகவே நின்று குழல் ஊதும் கையன்

குழலூதி நின்றால் கல்லும் உருகிவிடும்
புகலிடம் ஏதென்று அல்லல் படுகின்ற
ஆவினங்களுக்குச் சொந்தயிடம் இதுவென்று
புரிந்திடும் வண்ணம் புல்லாங்குழல் எடுத்து
இனியகானம் இசைக்கின்ற கண்ணனெனும்

மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா

மிசை ஏறு உம்பன் நொய்ய சடையோன் எந்தை
கைதொழ மெய்ஞ்ஞானம் சொல் கதிர்வேலா

திரிபுரம் எரிக்கப் புறப்பட்ட வேளையில்
விநாயகனை வணங்காமல் தேவர்கள் தொடங்க
தேரின் அச்சு முறிந்து வீழ்கையில்
இடபமாக வந்து நின்று திருமால்அருள
அதன்மீது ஏறியருளிய பெருமானாம்
மெலிந்த சடைகளை உடைய எந்தைபிரான்
சிவனாரும் கைதொழுது நின்று
ஓமெனும் பிரணவத்தின் பொருளை அறியவேண்டி
பணிந்து நின்று கேளெனச் சொல்லி
பிரணவப் பொருளினை அருளிச் செய்த
ஆதவன்போல ஒளிபொருந்திய
வேலினைத் தாங்கும் முருகோனே!

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
கொள்ளைகொளு மாரன்கை யலராலே
கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
கொல்லிமலை மேனின்ற பெருமாளே

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுனமே சென்று
கொள்ளைகொளும் மாரன்கை அலராலே
கொய்து தழையே கொண்டு செல்லும் மழவா! கந்த!
கொல்லிமலை மேல் நின்ற பெருமாளே!

தினைப் புனத்தைக் காவல் செய்யவேண்டி
கையில் கவண்கல் எடுத்து வந்து
ஆலோலம் பாடிநின்ற வள்ளிநாயகியாரின்
புனத்தை நாடிச்சென்று காதலுணர்வைக்
கூட்டித்தரும் மன்மதன் எறிகின்ற மலர்க்கணை
விளைவித்த காதல் பெருக்கினால் ஆட்பட்டு
கையில் கிடைத்த தழைகளையெல்லாம் பறித்துக்கொண்டு
சென்ற கட்டழகு உடையவனே! கந்தக் கடவுளே !
கொல்லிமலைமீது வீற்றிருக்கும்
பெருமை மிகுந்த சிறந்தவனே!

தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுண மூவந்த மெனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்யபுல னோரைந்து
தொய்யுபொரு ளாறங்க மெனமேவும்

தொல்லைமுதல் தான் ஒன்று மெல்லி இரு பேதங்கள்
சொல்லு[ம்]குணம் மூ[ன்று] அந்தம் எனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓர் ஐந்து
தொய்யு பொருள் ஆறு அங்கம் என மேவும்

[இந்த வரிகள் ஒன்று முதல் ஆறு வரை வருகின்ற அழகிய கவித் திறத்தைக் காட்டுகின்றது.]

பழைமை எனவரும் இறைவனே முதல்வன்

சக்தியும் சிவனுமாய் இருவராகி அருள் புரிவான்

சத்துவம், இராஜஸம், தாமஸம் என்னும்
முக்குணங்களின் சொரூபமாய் விளங்கும்
அயன்,அரி,அரன் என்பவரின் மூலமாய் விளங்குவான்

ருக்,யஜுர்,சாம, அதர்வணம் என்னும்
நான்கு வேதங்களின் ஆதியாய்த் திகழ்வான்

சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்னும்
ஐந்து புலன்களையும் வென்றவனும் இவனே

நாசி வழியே உருவாகும் எழுத்துகளின் ஒலியானவன்
வாய் வழியே எழுந்த ஒலியின் விளைவாய் மகேச்வர சூத்திரம் என்னும் இலக்கணம் பிறப்பித்தவன்
கவிதைகளின் பாதம் போலும் சந்தஸ்
இதனுதவி இல்லாமல் எழுதும்கவி நிலைக்காது
இத்தனை இத்தனை எழுத்து, மாத்திரை என வரையறுக்கும்
கால் போலும் சந்தஸை உருவாக்கியவன்
எதனால் இப்பதம் இங்கு வந்ததென உணர்விக்கும்
நிகண்டு எனப்படு நிருக்தம் காதுவழியே தந்தவன்
காணும் பொருளைக் காட்டுவிக்கும் கண்போல
விளைவதைக் காட்டும் ஜோதிடம்எனும் கண்ணானவன்
இன்னின்ன செயல் செயும் கைகள்போலானவன்

என எம்மை சோர்வடையச் செய்யும்
ஆறு அங்கங்களை உடையவனாகி

[இவற்றை எல்லாம் விட்டால்தான் அவன் தெரிவான்! அறிவழிந்தாலே அவன் அகப்படுவான்!]

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
பல்குதமிழ் தானொன்றி யிசையாகி
பல்லுயிரு மாயந்த மில்லசொரு பானந்த
பௌவமுற வேநின்ற தருள்வாயே .

பல்ல பல நாதங்கள் அல்க பசு பாசங்கள்
பல்கு தமிழ் தான் ஒன்றி இசையாகி
பல்லுயிருமாய் அந்தம் இல்ல[லா] சொரு[ரூ]ப ஆனந்த
பௌவம் உறவே நின்றது அருள்வாயே

ஒலிக்கின்ற ஓசையெலாம் நீயே ஆனாய்
வாழுமுலகில் கட்டிவைக்கும் பசு பாசங்களானாய்
வெள்ளமெனப் பெருகிவரும் தீந்தமிழில் பொருந்தி நின்றாய்
மனதை மயக்கும் இசையாகவும் ஆனாய்
அத்தனை உயிர்களிலும் வாழும் ஒரே உயிருமானாய்
இதன் காரணமாகவே முடிவே இல்லாதவனும் ஆனாய்
இத்தனையும் நிறைந்த ஆனந்த உருவக் கடலும் ஆன

இவைஅத்தனையும் கூட்டிவந்து நிலையாய் அளிக்கவல்ல
அந்தப் பொருளை எனக்குக் காட்டி அருள்வாயே!
*****************

******அருஞ்சொற்பொருள்*******

வெய்ய = கொடிய
தொய்யு பொருள் = சோர்வடையச் செய்யும் பொருள்
அல்க = தங்க
பௌவம் = கடல்
புகல் = அடைக்கலம்
மிசை = மீது
நொய்ய = மெலிதான, நுண்மையான
எந்தை = எம் தந்தை
மாரன் = மன்மதன்
மழவன் = கட்டான உடலை உடைய இளைஞன்
********************

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!
******************************

2 comments:

SP.VR. SUBBIAH said...

////கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
கல்வருக வேநின்று குழலூதுங்
கையன்மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
கைதொழ மெய்ஞ் ஞானஞ்சொல் கதிர்வேலா////

ஆகா, அற்புதம். அற்புதத்தைக் காட்டிய மேன்மைக்கு ஆயிரம் வணக்கங்கள், வி.எஸ்.கே சார்! வினை தீர்க்கும் வேலனின் புகழைச் சொல்லும் உங்கள்பணி சிறக்க அந்த பழநி அப்பன் - வெற்றி வேலன் அருள் புரிவானாக!

VSK said...

ஆசானின் வருகை எப்போதுமே மனமகிழ்சி தருவது!
தங்களது மேலான ஆசிகளுக்கு மிக்க நன்றி ஐயா!
முருகனருள் முன்னிற்கும்!